

மதுரையில் பழமை வாய்ந்த தலம்- மீனாட்சி கோவில். இங்கு அமைந்துள்ள பொற்றாமரைகுளம், சரித்திர புகழ் வாய்ந்தது. பொற்றாமரை குளத்தின் நீளம் 200அடி, அகலம் 148அடி ஆகும்.
மீனாட்சி அம்மன் கோவிலில் மழை பெய்தால் அந்தத் தண்ணீர் பொற்றாமரைகுளத்தில் வந்து சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்த பொற்றாமரைகுளம் சிறந்த மழைநீர் சேகரிப்பு குளமாகவும் திகழ்ந்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பொற்றாமரைகுளத்தில் தண்ணீர்சேமிப்பும் குறைந்தது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, பொற்றாமரை குளத்தின் அடிப்பரப்பு களிமண் படுகையினால் அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளத்திற்கு மழைநீர் வரும்போது பாசிபடர்ந்து வளர வாய்ப்பு உண்டு.
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி தொழில் நுட்ப அம்சங்களுடன் பொற்றாமரைக்குளத்தின் ஸ்படிக துல்லிய தூய்மை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டு பகுதிகளில் உள்ள இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, தொல்லியல்துறை கருத்தின் அடிப்படையில், ரூ.70 லட்சம் மதிப்பில் அலங்கார கல் தூண்களுடன் கூடிய பித்தளை தடுப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பொற் றாமரைக்குளத்தை மேலும் பொலிவு படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
குளக்கரையை சுற்றியுள்ள சுவர்களை வண்ணமயமாக மாற்றுவதற்காக, ரு.1.60 லட்சம் செலவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை 15நாட்களுக்குள் முடிப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.