திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்கள்

டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்கள்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com