

எட்டுப்பட்டறை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
திருமங்கலம்
650 ஆண்டு கால பழமை வாய்ந்த திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் திருமாங்கல்யம் செய்து தந்த ஊர் என்பதால் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் நாளடைவில் திருமங்கலமாக மாறியதாகவும் வரலாறு உள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இன்று திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று காலை கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பச்சை பட்டு உடுத்தி மீனாட்சியும், பிரியாவிடையுடன் சொக்க நாதரும் மணமேடையில் எழுந்தருளினர்.
அதனை தொடர்ந்து காப்பு காட்டும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8.40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மீனாட்சி-சொக்கநாதர் திருமணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் நடந்த போது கோவிலில் திரண்டிருந்த பெண்கள் புதுதாலி மாற்றிக் கொண்டனர்.
இதே போல் திருமங்கலம் எட்டுப்பட்டறை மாரியம்மன் கோவிலிலும் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தியும், சொக்க நாதர் வெண்ணிற பட்டு உடுத்தியும் மணமேடையில் எழுந்தருளினர். தொடர்ந்து மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.