search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
    X

    வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் காமதேனு வாகனத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் அருள் பாலிக்கும் காட்சி.

    திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது

    • கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்ற மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பட்டாபிஷேகம்

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(5-ந் தேதி) மாலை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சந்தனம், பால், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் சுவாமி- அம்பாள் கோவில் ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி சுப்பிரமணியசாமிக்கு பட்டா பிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (6-ந் தேதி) காலை 11 மணி அளவில் சிறிய வைர தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும்.இந்த தீபத்தை பார்த்த பின்பு பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபமேற்றி வழிபாடு செய்வார்கள்.

    இதையடுத்து இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை எரிக்கப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி அங்கு சுவாமி தரிசனம் செய்து எரிந்த சொக்கப்பனை சாம்பல்களை தங்களது வயல்களில் தூவுவார்கள். இதன் மூலம் பயிர்கள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை.

    கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு கோவில் சார்பில் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்தப் பகுதி மோட்ச தீபம் ஏற்றும் பகுதி எனக் கூறி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு மலைக்குச் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    தடையை மீறி யாரும் செல்லாத வகையில் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவான நாளை மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதைகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதேபோல மலையைச் சுற்றிலும் மலை மேல் உள்ள நெல்லி தோப்பு, காசி விசுவநாதர் கோவில் பகுதி, மலை உச்சியில் உள்ள தீப தூணில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    Next Story
    ×