ஷேர் ஆட்டோ டிரைவர் சீட்டில் பயணித்த நூலக ஊழியர் சாவு

ஷேர் ஆட்டோ டிரைவர் சீட்டில் பயணித்த நூலக ஊழியர் பலியானார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷேர் ஆட்டோ டிரைவர் சீட்டில் பயணித்த நூலக ஊழியர் சாவு
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டியை அடுத்துள்ள வாடி கருப்பு கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 32). இவர் உசிலம்பட்டியில் உள்ள நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் அரசு பஸ் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை வேலைமுடிந்து தங்கபாண்டி ஊருக்கு புறப்பட்டார். இதற்காக உசிலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த வாசிநாதன் என்ப வர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ அங்கு வந்தது. அளவுக்கு மீறி அதில் பயணிகள் பயணித்தனர். இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் தங்கபாண்டி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com