search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்
    X

    கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்

    • மதுரையில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளில் போலீ சார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களது சொத்துக்கள் மட்டுமின்றி உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்தில் 322 கிலோ கஞ்சா, கார், லாரி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.53 லட்சத்து 29 ஆயிரத்து 881 ஆகும்.

    சேடப்பட்டி பகுதியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.29 லட்சத்து 31 ஆயிரத்து 671 ஆகும். மேலும் இதே இடத்தில் உள்ள மற்றொரு பகுதியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    ஒத்தகடை போலீஸ் சரகத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.5.5 கோடி ஆகும். நாகமலை புதுக்கோட்டையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 450 ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 559.80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரம் செய்தவர்களின் ரூ.8 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 2 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவுக்கு சென்று அங்கு கஞ்சா சாகுபடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மூலம் கஞ்சா மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே ஆந்திராவில் பதுங்கி இருந்து கஞ்சா சாகுபடியில் ஈடுபடும் குற்ற வாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    மேலும் மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் மொத்த வியாபாரி கள், சில்லரை வியா பாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×