search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து மோசடி
    X

    கைதான வினோத்

    போலி ஆவணம் தயாரித்து மோசடி

    • போலி ஆவணம் தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த வேலம்பட்டியைச் சேர்ந்தவர் வீரன் (வயது 90). இவர் மதுரை எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், எனக்கு சொந்தமான நிலத்துக்கு அரசாங்கம் இழப்பீடாக வழங்கிய ரூ.13 லட்சத்தை, துரைச்சாமி நகர், வீரணன், அவரது மகன் வினோத் ஆகிய 2 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்து விட்டனர் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் படி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். மேலும் திண்டுக்கல் முதியவர் வீரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் எனக்கும், துரைசாமி நகர் வீரணன் என்பவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலூகா, செங்குளம் கிராமத்தில் நிலங்கள் உள்ளன. இதில் 85 செண்ட் நிலத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறை நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தி கொண்டது. இதற்காக எங்களுக்கு ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி நோட்டரி பப்ளிக் முன்னிலையில் ஒப்பந்த பத்திரம் தயாரானது. மொத்த சொத்தில் 57.5 சதவீத பங்கு வீரணனுக்கும், 42.5 சதவீத பங்கு எனக்கும் சொந்தமானது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே 4 வழி சாலைக்காக வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 198 தொகையை முழுவதுமாக அபகரிப்பது என்று வீரணனும், அவரது மகன் வினோத்தும் முடிவு செய்துள்ளனர். அவர்கள் என் அனுமதியின்றி ஒட்டு மொத்த பணத்தையும் தனிநபர் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணம் தயார் செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் என் கையெழுத்து போலியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பணமும் வங்கி அதிகாரிகள் துணையுடன் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கையெழுத்து போட முடியாமல், கை ரேகை மட்டுமே பதிவு செய்து வருகிறேன். எனவே தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொடுத்த பணத்தை போலி ஆவணம் வாயிலாக வங்கி அதிகாரிகள் துணையுடன் வீரணன் மற்றும் அவரது மகன் வினோத் ஆகிய இரண்டு பேரும் அபகரித்துக் கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கான நிவாரண தொகையை வினோத் தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து ரூ.13 லட்சத்தை மோசடி செய்ததாக எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×