search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம்-முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
    X

    ஆர்.பி.உதயகுமார்

    பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம்-முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

    • பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை கேரளா நடத்தி வருகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் தென் மாவட்ட உயிர்நாடி பிரச்சினையில் மக்களின் உரிமையை காக்க அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை யாராலும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களுக்கும், பாசனத்திற்கும் குடிநீரையும் நம்பி உள்ளனர்.

    தற்போது கேரளா முல்லைப் பெரியாறுக்கு எதிராக ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கேரளா முல்லை பெரியாறுக்கு எதிராக ஏற்கனவே ஆவணப்படம் எடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல் செய்ய இணைய வழி கையெழுத்து இயக்கத்தை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தற்போது அணையில் நீர்மட்டம் 127 அடிக்கு மேல் உள்ளது. பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் சார்பில் பெரியாறு அணைக்கு எதிராக கேரளா பிரசாரம் செய்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுனர் குழு, கண்காணிப்பு குழு ஆய்வு செய்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் இந்த சர்ச்சை வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் எடுக்க சமூக வலைதளத்தில் நிதி வசூல் செய்வது மட்டுமல்லாது கேரள நடிகர்களும் அணைக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.கேரளாவின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான விளக்கங்களை நாம் சொல்ல வேண்டும்.

    கேரளா, முல்லைப்பெரியாறுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் . இது இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிமையைநிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×