search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் மீதான புகாரை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரி வழக்கு
    X

    டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் மீதான புகாரை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரி வழக்கு

    • டி எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் மீதான புகாரை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • விசாரணை முடிவில், மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்து வருகிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்காக சட்டரீதியாக திருவாடனை அப்போதைய போலீஸ் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடத்தி வந்தேன்.

    இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. மற்றும் போலீசார் பொய் புகார் பெற்று என் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை கைது செய்த போது டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் என்னை ஈடுபடுத்தினர்.

    இதை திருவாடானை நீதிபதியிடம் தெரிவித்தேன். அவர் அதை பதிவு செய்து கொண்டார்.

    பின்பு ஜாமீனில் வெளி வந்த நான் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்திற்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு தாக்கல் செய்தேன்.

    இதனால் டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீண்டும் காவல் நிலைய கட்டுப்பாட்டில் வைத்து என்னை மிரட்டி இழுத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து தலையில் காயத்தை ஏற்படுத்தி மீண்டும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே என் மீதான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. அதே நேரம் நான் எனக்கு எதிரான வழக்கு குறித்து ஐகோர்ட்டிலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறி என் புகாரை மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

    மேலும் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநா ராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை முடிவில், மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×