search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • சித்திரை திருவிழா 23-ந்தேதி தொடங்குவதால் மதுரை வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • தடுப்பணைகளால் விபத்து அபாயம் ஏற்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது. மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.

    அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கு வார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்

    இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    வைகை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இது இன்னமும் தூர்வாரப்படவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம். அப்போது மக்கள் வெள்ளம் 6 அடி உயர தடுப்பணை அருகே சென்றால், தண்ணீருக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர வைகை ஆற்றின் படித்துறைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    எனவே அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கிறது. வைகை ஆற்றில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள், மொட்டையடித்து ஆற்றில் நீராடுவார்கள். அப்போது ஆற்றின் படிகள் சிதிலமடைந்து இருப்பதன் காரணமாக அதனை அறியாமல் பக்தர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் முன்பாக ஆற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×