

மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56), விவசாயி.
இவரது மகன் ராஜமாணிக்கம் (32), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி ஷாலினி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜமாணிக்கத்திற்கும், அவரது தந்தை சந்திரனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இன்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அதன் பிறகு ராஜமாணிக்கம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது அங்கு சந்திரன் வந்தார். அவர் மகனை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். என்ன செய்கிறோம் என்பதை மறந்து வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து வந்து ராஜமாணிக்கம் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து மேலவளவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் ராஜமாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.