search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது
    X

    வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது

    • வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (வயது 43). இவர் டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். பாலசுப்பிரமணியன் விளாச்சேரி, கலைஞர் நகரில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதற்கு அவர் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு ரூ. 450 -ஐ பறித்து சென்றது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வளையப்பட்டி, மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீமைராஜா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருநகர் பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர் முத்துராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்(26) இவர் தபால் தந்தி நகரில் உள்ள ஒயின் ஷாப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.

    ராஜசேகரன் சிப்ஸ் கடை முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.900த்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜசேகரன், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பீ.பி.குளம் காந்திஜி தெரு, கோகுல்விஜய்(29), பி.பி.குளம் இந்திரா நகர், சுதாகரன்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுதாகரன் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன் மகன் நிதீஷ்குமார் (23). இவர் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ பறித்துச் சென்றார். இது தொடர்பாக திடீர்நகர் போலீசில் நிதிஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28), ரெயில்வே ஊழியர். இவர் மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நின்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

    இதற்கு பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 2,500-ஐ பறித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக பாலமுருகன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தக்காளி கணேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×