search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை

    • மதுரையில் ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா. இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கணவர் ராணுவத்திலும், மகன் வெளியூரிலும் வேலை பார்த்து வந்ததால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த 32 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி, ரூ.62 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதனிடையே மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கல்பனா கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம், பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×