முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி; 8 பேர் கைது

முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி; 8 பேர் கைது
Published on

மதுரை

மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் 17 வயதுடைய இளைஞர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

மதுரை ஆண்டாள் கொட்டாரம் கபீர் நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது60). இவர் சம்பவத்தன்று அண்ணா நகரில் உள்ள ஆரம்ப சுகாதாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250-ஐ பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை வடபழனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பவித்ரன், திருநகர் 3-வது நிறுத்தம் நல்லான் மகன் ராஜேஷ் குமார் (37), திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு முருகன் என்ற குட்டை முருகன் (40), திண்டுக்கல் பேகம்பூர் சக்திவேல் மகன் சுபாஷ் (23) ஆகிய 4 பேர் முதியவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் செல்வம்(30). இவர் சம்பவத்தன்று நாகுபிள்ளை தோப்பு ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டதுமானாமதுரை ஆவாரங்காடு சிவசிங்கம் மகன் லட்சுமணன் (32),மானாமதுரை ஆவாரங்காடு சரவணகுமார் மகன் அகிலன் (22), சிவகங்கை திருப்புவனம் நந்தகோபால் மகன் கண்ணன் என்ற கேடி கண்ணன் (20), சிவகங்கை கலியநத்தூர் முருகன் மகன் நிதிஷ்குமார் என தெரியவந்தது.

இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com