

மதுரை
மத்திய ரெயில்வே வாரிய பயணிகள் வசதி குழு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், பழனி ஆகிய ரெயில் நிலையங்களில் நேரடியாக ஆய்வு நடத்தியது.
பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத், மதுசூதனன், மும்பை கைலாஷ், உத்தரகண்ட் ராம்குமார்பகன், தெலுங்கானா உமாராணி ஆகிய 5 பேர் கொண்ட இந்த குழு ஒருங்கிணைப்பாளர் எம்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் மதுரை ரெயில் நிலையத்தில் இன்று ஆய்வு நடத்தியது.
மதுரை ரெயில் நிலைய நடைமேடை, நடை மேம்பாலம், குடிநீர் குழாய்கள், கழிப்பறை, ஓய்வு அறைகள், தங்கும் அறைகள், உணவகங்கள் மின்தூக்கி மற்றும் எஸ்கலேட்டர் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து ரெயில்வே வாரிய பயணிகள் வசதி குழுவினர், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை சந்தித்தனர். அப்போது ஆய்வில் கண்டறிந்த விவரங்கள் தொடர்பாக ஆலோசித்தனர்.
கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் பிரசன்னா, ரெயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.