

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் 'தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களது பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக உமறுப்புலவர், தாயுமானவர், சுப்பிரமணியம் மற்றும் வெள்ளை வாரணனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள போப் ஜான்பால் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்ட த்திலுள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.