

வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் சந்தைக்கு வடமதுரை, எரியோடு, கொம்பேறிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால் ஏராளமான விவசாயிகள் இதனை நடவு செய்து வந்தனர்.
தற்போது பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி சந்தைக்கு அதிக அளவு கொண்டுவரப் படுகிறது. அய்யலூர் சந்தைக்கு தினசரி 15 முதல் 20 டன் வரை தக்காளி கொண்டு வரப்படும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் இங்கு வந்து தக்காளியை வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால் சமீப காலமாக வரத்து அதிகரிப்பால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் 1 கிலோ ரூ.4க்கு விற்பனையாகி வருகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.
ஹைபிரிட் தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இன்று மட்டும் சுமார் 5 டன் தக்காளி விற்பனையாகாமல் தேக்கமடைந்தது.
இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், விலை வீழ்ச்சியடையும் சமயத்தில் எல்லாம் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
பறிப்புக்கு ஆட்கள் வைத்து சந்தைக்கு கொண்டு வரும் வாடகைகூட கிடைக்கவில்லை. எனவே இப்பகுதியில் குளிர் பதனக்கிடங்கு அமைத்து விளைச்சல் அதிகமாக உள்ள சமயங்களிலும், விலை வீழ்ச்சியடையும் சமயங்களிலும் தக்காளியை பதப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.