ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது

வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்ததுஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
ஈரோடு மார்க்கெட்டில்  எலுமிச்சை பழம் விலை குறைந்தது
Published on

ஈரோடு, ஜூன். 9-

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com