search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள்  நடமாட்டம்
    X

    கோத்தகிரியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்

    • கண்காணிப்பு காமிராவில் காட்சிகள் பதிவு
    • மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    ஊட்டி,

    கோத்தகிரி நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாடும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ் சிறுத்தை, புலி, காட்டு யானைகள், மான்கள், காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதுடன் அவற்றின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் அவ்வப்போது மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலைக்கு அருகே கார்சிலி பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கருஞ்சிறுத்தை மற்றும் முதுகில் 2 குட்டிகளை சுமந்து செல்லும் தாய்க்கரடி உள்ளிட்டவை உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த காட்சிகள் அங்குள்ள தனியார் தொழிற்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் குறித்த செய்தி வெளியே பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளில் திரியும் வன விலங்குகள் தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×