search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் வள்ளங்களில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி
    X

    வாவத்துறை கடற்கரை பகுதிக்கு பிடித்து கொண்டு வரப்பட்ட 5 கிலோ எடை கொண்ட வஞ்சிரம் மீன்.

    கன்னியாகுமரியில் வள்ளங்களில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி

    • ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
    • ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

    விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×