search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் 2 பேரை மீட்பதில் பின்னடைவு
    X

    மணப்பாடு கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் 2 பேரை மீட்பதில் பின்னடைவு

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×