search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
    X

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

    • கோதையாறு, குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி உள்ளது. அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே அணைகள் நிரம்பி வழிவதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.97 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 509 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.55 அடியாக உள்ளது. அணைக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.45 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 15.55 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ள ளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் கடந்த 10 நாட்களாக முழு கொள்ள ளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 42.65 கன அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 8.30 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மற்ற அணைகள் அனைத் தும் நிரம்பி வழியும் நிலையில் 2 மாதமாக மழை பெய்த பிறகு பொய்கை அணை நீர்மட்டம் உயராத நிலையில் உள்ளது.

    Next Story
    ×