நாகர்கோவில் மயிலாடியில் 48.2 மில்லி மீட்டர் மழை

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் மயிலாடியில் 48.2 மில்லி மீட்டர் மழை
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடி, பொற்றையடி, சாமிதோப்பு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 48.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், இரணியல், முள்ளங்கினாவிளை, ஆரல்வாய்மொழி, கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் மிதமான அளவு தண்ணீர் பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருவியல் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.53 அடியாக இருந்தது. அணைக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு- 1 அணை நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளில் தீவிரம் காட்ட தொடங் கியுள்ளனர்.

தக்கலை, இரணியல், குலசேகரம், தேரூர், அருமநல்லூர், பூதப் பாண்டி பகுதிகளில் கன்னிபூ சாகுபடிக்கான பணியை தொடங்கி யுள்ளனர்.

வயல் உழவு பணி மற்றும் நாற்றுப்பாவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com