

கன்னியாகுமரி:
இரணியல் அருகே குருந்தன்கோடு அடுத்த தெற்கு ஆலன்விளை பகுதியை சேர்ந்தவர் அன்டலின் சுஜித் (வயது 31). காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவர், நேற்று காலை சுமார் 7 மணி அளவில் குருந்தன்கோடு பாலம் அருகில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அன்டலின் சுஜித்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது சுஜித் தன்னிடம் பணம் இல்லை என கூறியதும் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ.2000-ஐ பறித்துள்ளார்.
இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களையும் மிரட்டிய அந்த நபர் வெட்டுக்கத்தியை தரையில் உரசி தீப்பொறி ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து அன்டலின் சுஜித் இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் விரைந்து செயல்பட்டு அந்து வாலிபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் ஆசாரிவிளையை சேர்ந்த கார்த்திக் என்ற சின்ன கார்த்திக் (26) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.