நாகர்கோவிலில் கடையில் ரூ.3½ லட்சம் திருடிய வாலிபர் கைது

சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் சிக்கினார்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவிலில் கடையில் ரூ.3½ லட்சம் திருடிய வாலிபர் கைது
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் டெரிக் ஜங்ஷனில் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

மறுநாள் கடைக்கு வந்தபோது மேஜை டிராயரில் இருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதையடுத்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் மேஜையை திறந்து பணத்தை எடுத்துச்செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் இம்மானுவேல், நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையனின் உருவம் சிக்கியது. அதை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள்.

விசாரணையில் வர்த்தக நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது வடசேரி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட நபரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் வர்த்தக நிறுவனத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்தபோது, வர்த்தக நிறுவனம் பூட்டுவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்குள் சென்று ஒருபுறத்தில் மறைந்து கொண்டதாகவும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற பிறகு பணத்தை எடுத்து விட்டு மாடி வழியாக தப்பி சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com