search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை மூடிகள் ரூ.38 லட்சத்தில் சீரமைப்பு மேயர் மகேஷ் நேரில் ஆய்வு
    X

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை மூடிகள் ரூ.38 லட்சத்தில் சீரமைப்பு மேயர் மகேஷ் நேரில் ஆய்வு

    • பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது
    • பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படும் மூடிகளை சீரமைக்க மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து நாகர்கோவில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு அதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூடிகளை குடிநீர் வடிகால் வாரியம் தான் சீரமைக்க வேண்டும்.

    ஆனால் பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் சீரமைக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மூடிகளும் சீரமைக்கப்படும். மாநகரப் பகுதியில் 1500 பாதாளசாக்கடை மூடிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    தெருவிளக்கு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வரப்பட்ட நிலையில் அதை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ. 14 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 14251 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்ட உள்ளது.

    முதல் கட்டமாக 820 எல்.இ.டி.விளக்குகள் ரூ.71 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 31 வார்டுகளில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் ரோட்டில் இன்று அந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    Next Story
    ×