search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் நகை அபேஸ் செய்தவர் கைது
    X

    பெண்ணிடம் நகை அபேஸ் செய்தவர் கைது

    • சமூக வலைதளம் மூலம் பழக்கம்
    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கணவனை இழந்து வசித்து வருகிறார். இதையடுத்து அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சமூக வலைதளம் ஒன்றில் மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்து வாலிபர் ஒருவர் பதிவு செய்திருந்தார். உடனே அந்த பெண் அந்த வாலிபரை தொடர்பு கொண்டார். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வாலிபர் பெண்ணை நெல்லை பகுதியில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அந்த வாலிபரும் அங்கு வந்தார். அப்போது அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தன்னை மறுமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சில தோஷங்கள் இருப்பதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகையை கழட்டிக் கொடுக்குமாறு கூறினார். வாலிபரை நம்பி அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் தங்க நகை வைத்துவிட்டு அவர் கையில் இருந்த கவரிங் நகையை பூஜைக்கு வைத்தார். பூஜை முடிந்த சிறிய நேரத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் கடலில் பூஜை செய்த பொரு ட்களை போட்டுவிட்டு வருவ தாக கூறிவிட்டு 5 பவுன் நகையுடன் மாயமானார். நீண்ட நேரமாக அந்த பெண் வாலிபருக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றியது கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த யுவராஜ் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்று யுவராஜை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கன்னியாகுமரியில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் இவரும், அவரது மனைவியும் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய சமூக வலைதளங்கள் மூலமாக பெண் தேடியுள்ளார். பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்த யுவராஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×