

கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். இவர் தினமும் இரவில் விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் காலை வங்கியில் செலுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன், சக ஊழியர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் அருகே இறங்கிய அவர், அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது இருளில் அவரை தாக்கி விட்டு யாரோ பணத்தை பறிக்க முயன்றதாக போலீசில் புகார் செய்யப் பட்டது.
இந்த சம்பவத்தின் போது, கோபாலகிருஷ்ணன் கைவிரல் துண்டானதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிங்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகங்களில் மனுவும் அளிக்கப்பட்டது.
பணம் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அதில் ஈடுபட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது, அவர்கள் பணம் பறிக்க முயன்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.