தக்கலை அருகே போதையில் தள்ளாடும் குடிமகன்களால் பயணிகள்-பொது மக்கள் கடும் அவதி

சாலையில் விழுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தக்கலை அருகே போதையில் தள்ளாடும் குடிமகன்களால் பயணிகள்-பொது மக்கள் கடும் அவதி
Published on

தக்கலை :

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரும் வந்து மது குடிக்கின்றனர்.

இதில் சிலர் போதை தலைக்கேறி, சாலையில் அங்கும் இங்கும் தள்ளாடுவது, ஆபாச வார்த்தைகளை சத்தமாக பேசுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் நடமாடும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முட்டைக்காடு பகுதியசை் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், போதையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள், கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதற்குள் ரகளையில் ஈடுபட்டவர், போதை அதிகமாகி சாலையிலேயே விழுந்து விட்டார். ஆடை அவிழ்ந்த நிலையில் என்ன நடக்கிறது என தெரியாமலே அவர் அங்கு படுத்து கிடந்தார். இதனை கண்ட பஸ் பயணிகள், பெண்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், தினமும் 5 முதல் 10 பேர் இது போல் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு காரணம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை தான். ரோட்டோரத்தில் மது அருந்தி விட்டு போக்குவரத்து இடையூறு செய்வதும் போதை தலைக்கேறியதும் அருகில் உள்ள கடைகளில் படுத்து கிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த நிலை மாறும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com