search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதிஅம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதிஅம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்

    • 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும் நிவேத்திய பூஜையும் நடந்தது.
    • சந்திர கிரகணம் முடிந்த பிறகு பரிகார பூஜைகள் நடத்தி அபிஷேகம் செய்யப் பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பௌர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான ஐப்பசி பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையையும் நிவேத்திய பூஜையும் நடந்தது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதன்பிறகு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. சந்திர கிரகணத்தை யொட்டி நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7.45 மணி வரை கோவில் நடை மூடப்பட்டு இருந்தது. அப்போது கிரகண தோஷம் ஏற்படாமல் இருப்பதற்காக கோவிலில் உள்ள பகவதி அம்மன் விக்ரகம் உள்பட அனைத்து விக்கிரகங்களும் தர்ப்பை புல்லால் சுற்றப்பட்டு, பட்டு துணிகளால் மூடப்பட்டு இருந்தது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு பரிகார பூஜைகள் நடத்தி அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, துளசி, தாமரை, உள்பட பலவகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×