search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
    X

    வைகாசி பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்

    கன்னியாகுமரி :

    வைகாசி பவுர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில்நேற்று மாலைநடந்தது. மாலை 5.30மணிக்கு பஜனையுடன் நிகழ்ச்சிதொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை நடந்தது. தொடர்ந்து சித்திரகுப்தர் பூஜை மற்றும் சாதுக்களிடம் ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.

    அதையடுத்து சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர்முன்னிலை வகித்தார்கள். இதில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க.தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கன்னியா குமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜா மணி அய்யர்தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×