search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் நாளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை
    X

    குமரி மாவட்டத்தில் நாளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை

    • கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.
    • சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை, தை அமா வாசை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள திருவி தாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும்.

    நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்ப டைய வேண்டும் என்ப தற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை நாளை அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்ப டும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படு கிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படு கிறது. பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழு வதும் செல்வச் செழிப்பு ஏற்படும், நெற்கதிர் மணி களை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பது ஐதீகம்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவைநடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×