search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தகவலை தெரிந்து கொள்ள குமரியில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் உதவி மையம்
    X

    கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தகவலை தெரிந்து கொள்ள குமரியில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் உதவி மையம்

    • தகுதியான பயனாளிகளுக்கு இன்று காலையிலும் குறுஞ்செய்திகள் வந்தது
    • பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.

    பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தது. இதையடுத்து அதை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வுக்கு பிறகு விண்ணப்ப படிவங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்கள் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக வெளியானது. குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2000 பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞர் உரிமை திட்டத்திற்கான டெபிட் கார்டை வழங்கி தொடங்கி வைத்தார். நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான குறுஞ்செய்திகள் வந்திருந்தது. சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வரவில்லை. இதனால் பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த பெண்களுக்கும் தாமதமாக குறுஞ்செய்திகள் வந்து சேர்ந்தன. நேற்று நள்ளிரவு வரை குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்த பிறகு பெண்கள் உற்சாகம் அடைந்தனர். இன்று காலையிலும் ஒரு சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இதுவரை சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள தகுதியானவர்களுக்கும் படிப்படியாக குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

    தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வருகிற 18-ந்தேதிக்குள் குறுஞ்செய்திகள் வந்து வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் டெபிட் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுஞ்செய்திகள் வராதவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்திற்கான தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 18-ந்தேதி நிராகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கான குறுஞ்செய்திகள் வரும் எதற்காக விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த பயனாளிகள் பக்கத்தில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மூலமாக மீண்டும் அதை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு அதிகாரிகள் அதை பரிசீலித்து கலைஞர் உரிமை திட்டத்திற்கான திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலனை மேற்கொள்வார்கள்.

    இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம்,விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த உதவி மையங்கள் வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்கள் நேரடியாக அந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×