search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிவீஸ்வரம் தொடக்கப்பள்ளியில் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாம்
    X

    வடிவீஸ்வரம் தொடக்கப்பள்ளியில் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாம்

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்த வில்லை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், இரண ஜன்னி, தட்டம்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    போதிய விழிப்புணர்வின்மை, பெற்றோரின் நேரமின்மை, சுகாதார பணியாளர்களின் காலிப்பணியிடங்கள், தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சில குழந்தைகளுக்கு ஒரு சில தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெறாமல் இருக்கலாம். இதன் மூலம் விடுபட்ட குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகள் பெறுவதற்காக இந்திய அரசு தீவிர மிஷன் இந்திர தனுஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு இத்திட்டம் 3 சுற்றுகளாக (ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்) மாதங்களில் நடைபெறுகிறது.விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் மாவட்டத்தில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் இதுவரை தடுப்பூசி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வாரம் தவணையில் உள்ள 72 கர்ப்பிணிகள் மற்றும் 1980 குழந்தைகள் முதல் சுற்றில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.முதல் சுற்று தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்டத்தி ற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தன்கோடு, மேல்புறம், தோவாளை, முன்சிறை, ராஜாக்க மங்கலம், தக்கலை, திருவட்டார், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மையங்களில் இன்று முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

    2-ம் சுற்று செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மற்றும் 3-ம் சுற்று அக்டோபர் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பொது சுகாதார பணி துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மாநகர் நல அலுவலர் ராம்குமார், வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராகினி, மருத்துவ ஆய்வாளர் சூரிய நாராயணன், டாக்டர்கள், செவிலியர்கள், பயனா ளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×