search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான வசதி-உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்
    X

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான வசதி-உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    • ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவு, முதுகு தண்டுவட பிரிவு, நரம்பியல் பிரிவு மற்றும் பங்கர் என்னும் புற்று நோய் கண்டறியும் மையம் அமைய இருக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோருடன் 2 மணி நேரம் ஆய்வு செய்தேன். ஆஸ்பத்திரியில் 204 மருத்துவ பணியிடங்களில் தற்போது 193 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மேலும் மருத்துவ உபகரணங்கள் வேண்டும் என கேட்டார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்சாதன வசதிகள் உள்பட பல உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான தானியங்கி ஆட்டோ கிளேவ் எந்திரம், துணிகளை உலர வைக்கும் எந்திரம் ரூ.75 லட்சத்தில் வாங்கி தரப்பட இருக்கிறது.

    நியூராலஜி பிளாக் பணிகள் ரூ.6.4 கோடியில் முடிந்துள்ளது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 50 தானியங்கி மருத்துவ படுக்கை ரூ.23.75 கோடியில் அமைய உள்ளது. குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு பணி மேற்கொண்ட போது இங்கு புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அறிவித்த நிதி நிலை அறிக்கையில் கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கர்ப்பப்பை, வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இங்கு கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பங்கர் அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் வேலை நிறைவடையும். அதன் பின் டெலிகோபால்ட் என்ற கருவி அமைக்கப்பட உள்ளது. எனவே அடுத்த மாதம் புற்றுநோய் கண்டறியும் மையம் கட்டுமான பணிகளை நானே தொடங்கி வைக்க இருக்கிறேன். புற்று நோயானது முதல் கட்ட பரிசோதனையில் கண்டறிந்தால் எளிதில் காப்பாற்றலாம். 3, 4 நிலைகளை கடந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டு விட்டது. ஒரு மருத்துவரின் மனைவி பி.இ சிவில் படித்திருக்கிறார். இங்கு சிவில் தேவை இல்லை என்பதால் பணி வழங்கப்படாமல் உள்ளது. குமரி மாவட்டத்தில் எலிக்கடிக்கு, நாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் கொடுத்த டிஸ்சார்ஜ் சம்மரியில் குழந்தைக்கு நாய் கடித்ததாக பதிவு இருந்தது. பாதுகாப்புக்காக நாய்க்கடி மருந்து செலுத்தினர். அதன்பிறகு கேரளாவில் தனியார் மருத்துமனையில் இல்லாத நாய் கடிக்கு சிகிச்சை அளித்ததாக அங்குள்ள மருத்துவரையும், அந்த மருத்துவமனையையும் புரமோட் செய்வதற்காக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் அந்த தகவலை பரப்பினர். அந்த செய்தியை பார்த்துவிட்டு எதிர்கட்சி தலைவர் வேலை மெனக்கெட்டு அறிக்கை விட்டார். தனியார் மருத்துவமனை தவறு செய்திருக்கிறது.

    அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறையிடமும் தெரிவித்துள்ளோம். அதற்கு நான் பதிலும் கொடுத்துவிட்டேன். அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும் பாம்புகடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2½ ஆண்டுகளாக நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ், சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிடம் மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×