search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு
    X

    நாகர்கோவிலில் இன்று பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு

    • குறைபாடுகளை சரிசெய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன

    நாகர்கோவில், மே.17-

    தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் ஆகியோர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு வாகனத்திலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என்று ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும்.

    வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும் கேமரா பொறுத்த வேண்டும்.

    ஆனால் கேமரா மற்றும் சென்சார் பொறுத்தப்படாமல் உள்ளது.

    இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    மாணவ- மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாக னத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைகளை சரி செய்யவேண்டும்

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 78 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 396 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பள்ளி வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும் மார்த்தாண்டத்தில் ஆய்வு பணி நடத்தப்படும். ஆட்டோக்களில் அதிக அளவு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. தனியார் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

    பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆய்வுக்கு வந்த பெரும்பாலான வாகனங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தி விட்டு வரும்படி அறிவுறுத்தினர்.

    இதே போல ஒரு சில வாக னங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கான ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

    Next Story
    ×