

கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பகவதியம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று காலை 10.30 மணி அளவில் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க சென்று உள்ளார்.
இவர் கன்னியாகுமரி- நாகர்கோவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது "திடீர்" என்று மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ளஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் அவரது கணவர் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.