search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு
    X

    மார்த்தாண்டம் அருகே தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் மீண்டும் கைவரிசை
    • மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் தரிவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் மோனிஷா (வயது 24). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு மோனிஷா, தனது தாயாரின் இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். சாங்கை-கோட்டகம் சாலையில் மோனிஷா வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதில் வந்த மர்மநபர் ஆள் நட மாட்டம் இல்லாத பகுதியில், மோனிஷாவின் வாகனத்தை வழி மறித்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதனை பயன்படுத்தி அந்த வாலிபர், மோனிஷா கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் நகையை பிடித்துக் கொண்டு போராடிய மோனிஷா, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார்.

    இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர், மோனிஷாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியுள்ளார்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளை பார்வையிட்டு அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பேராசிரியையிடம் 16 பவுன் நகை பறித்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×