search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வாகனத்தை வழிமறித்து 3 வயது சிறுவனை கடத்திய மர்ம கும்பல்
    X

    பள்ளி வாகனத்தை வழிமறித்து 3 வயது சிறுவனை கடத்திய மர்ம கும்பல்

    • சினிமாவில் வரும் சம்பவம் போல 2 கார்களில் வந்து தூக்கிச் சென்றனர்
    • சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார்.

    தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார். தினமும் பள்ளி வாகனத்தில் சிறுவன் சென்று வந்தான். இன்று காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான்.

    அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்தனர்.சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் வந்தவர்கள், ஹாரன் ஒலி எழுப்பியதால், பள்ளி வாகனம் அந்த கார்களுக்கு வழி விட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து முந்திச் சென்ற 2 கார்களும் திடீரென சாலையை மறித்து நின்றுள்ளது. அதில் இருந்து திபு...திபு...வென ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் டிரைவர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்ம கும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.

    சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கடத்தப்பட்டதை பார்த்த பலரும் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் வேறு வாகனங்களில், கடத்தல் கும்பல் சென்ற காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவனை கடத்திய 2 கார்களும் மாயமாக மறைந்து விட்டன. இதற்கிடையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களது விசாரணையில், சிறுவனை கடத்திய கார்கள், நாகர்கோவில் நோக்கி சென்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனை கடத்தியது யார்? அவர்கள் எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×