search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    X

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

    • 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது
    • ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி பார்வையிட்டனர்

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்கு வரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறை முகத்தில் கரையேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் விவேகானந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர்.

    ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 22 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    இதில் புனித வெள்ளியான 7-ந்தேதி அன்று 6 ஆயிரத்து 800 பேரும், 8-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 800 பேரும், ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று 8 ஆயிரத்து 100 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×