search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோருக்கு ரூ.35 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
    X

    கோப்பு படம் 

    நுகர்வோருக்கு ரூ.35 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

    • மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு
    • சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் வடகரையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் சென்னை ஆவடியிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய ஒரு குழுவாக அந்தமான் செல்ல பணம் செலுத்தியிருந்தார்.

    சுற்றுலா நிறுவனமும் இந்த 14 பேருக்கு விமான டிக்கெட் பதிவு செய்து அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பயணம் செல்ல இயலவில்லை. இதனால் தாங்கள் செலுத்தியிருந்த பணத்தை திரும்பதர வேண்டுமென சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு விமான நிறுவனம் டிக்கெட்டுக்கான கட்டணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளனர். உடனடியாக மீண்டும் சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமான கட்டணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் ஒரு காசோலையை வழங்கியுள்ளது. ஆனால் பணமில்லாமல் இந்த காசோலை திரும்பி விட்டது.

    இதனால் பாதிப்படைந்த அவர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமான கட்டணமான ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், நஷ்ட ஈடு ரூ.35 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    Next Story
    ×