search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிப்பு
    X

    கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம் 

    குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிப்பு

    • ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    • விஜய்வசந்த் எம்.பி. தலைமையில் திரளானோர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும், ஐதராபாத் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாருக்கு விற்க கூடாது, கோட்டார் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும், தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், ரெயில்வே மேம்பாலங்களை கட்ட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கன்னியா குமரி மாவட்டத்தை ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம் (கிழக்கு) மற்றும் பினுலால் சிங் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர் கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி பேசுகையில், காங்கிரஸ் கட்சி எழுச்சி அடையும் நாள் வந்துவிட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. சென்னை- நாகர்கோவில் தினசரி ெரயில் இயக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சம்பந்தமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து மத்திய அரசிடம் மனு அளித்து வருகிறேன். ஆனால் அதன் மீது மத்திய அரசு அலச்சியம் காட்டி வருகிறது என்றார்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் (விஜய் வசந்த்) மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறேன். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

    சென்னை- நாகர் கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், புதிய மேம்பாலங்கள் அமைக்கவும் மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை மத்திய அரசு அளித்துள்ளேன்.

    ஆனால் இன்றளவிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. காங்கிரஸ் கட்சி எம்.பி என்பதால் எனது கோரிக்கைகள் மத்திய அரசால் புறக் கணிக்கப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசிடம் ரெயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்கள் அளிப்பேன். அதிலும் எந்த வித முன்னேற்றம் இல்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×