

வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு விஜயபானு (வயது 47) என்பவர் இடை நிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவரது சான்றிதழ்களை தற்போது சரிபார்த்தனர். அப்போது அவர் 12ம் வகுப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை விஜயபானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.