பழனி அருகே காளியம்மன் கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பழனி அருகே காளியம்மன் கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
Published on

பழனி:

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் அமைந்துள்ள மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக சண்முகநதியில் இருந்து மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இரவு அம்மன் ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் 5000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த பூக்குழி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு பரவசமடைந்தனர்.

கோயில் முறைகாரர் முதலில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். 2 கைகளிலும் தீச்சட்டி, குழந்தைகள், கரும்பு தொட்டிலில் குழந்தை, அம்மன் வேடமணிந்து என பல்வேறு வகையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் ஒரு பக்தர் நாதஸ்வரம் இசைத்தபடியே பூக்குழி இறங்கினார். தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் என விழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டதால் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com