

கடையம்:
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகனை அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும் சிறப்பு உடையதாகும் . இந்த கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவது வழக்கம். வைகாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கிரிவலம் முடிந்த பின்னர் ஒடிசா ெரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெறவும், விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து மோட்சம் பெறவும், இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது எனவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.