நாடு முழுவதும் இன்று 9-வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணை

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்படுவதாகவும் பெருமிதம்
நாடு முழுவதும் இன்று 9-வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணை
Published on

 கோவை.

இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு ேவலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று 9-வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தபால்துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதிசேவைகள் துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விழாவுக்கு பின் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு வேலை என்பது எல்லோருக்கும் ஒரு கனவு. அதனை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் பேருக்கு அரசு துறையில் வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன்படி தொடர்ந்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் ெரயில் சேவை, சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 500 கம்பெனிகள் மட்டுமே இருந்தன. தற்போது கம்பெனிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 லட்சம் கம்பெனிகள் தற்போது உள்ளது.

இவற்றில் பெரும்பாலான கம்பெனிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களே சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்கள். வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும்.

இலங்கை கடற்படை தொடர்ந்து நமது நாட்டின் மீனவர்கள் மற்றும் படகுகளை பிடித்து வருகின்றனர். அதனை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்டு வருகிறது.

மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தையே பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு படகுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கிருஷ்ணா கல்லூரி தாளாளர் மலர்விழி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com