ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்
Published on

சென்னை:

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

சென்னையில் ஆவின் பாலை பொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் வினியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, "ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்றனர். மக்களின் தேவையை தெரிந்து கொண்டு 4 மடங்கு விலையை உயர்த்தி விற்றனர்.

எனவே, அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஆவின் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனங்களை நேற்று இயக்கவில்லை. இதனால் மாநகர பஸ்கள் மூலம் ஆவின் பால் மாதவரம் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது.

ஆவின் பால் இன்றும் பல இடங்களில் தாமதமாக சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, "அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் பால் விநியோகம் பாதித்தது. இன்று ஆவின் வினியோகம் சீராகி விடும்" என்றனர்.

ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com