search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கல்
    X

    தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கல்

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
    • தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×