search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு இழப்பீடு  வழங்கிய இன்சூரன்சு நிறுவனம்
    X

    லாரி தீப்பிடித்து எரிந்த வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு இழப்பீடு வழங்கிய இன்சூரன்சு நிறுவனம்

    • பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார்.
    • கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, வேலம்மாவலசில் வசிப்பவர் பழனியப்பன் (வயது 48). இவர் ஒரு லாரி வைத்து, அவரே டிரைவராக பணிபுரிந்து, சுயமாக தொழில் செய்து வந்தார். அந்த லாரிக்கு, இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரீமியம் செலுத்தி பாலிசி பெற்றுள்ளார்.

    கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு நகரில் இருந்து நூல் பண்டல் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, ராஜஸ்தான் செல்வதற்காக பழனியப்பன் லாரியை ஓட்டிச் சென்றார்.

    லாரி தீ பிடித்தது

    அரவக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே சென்றபோது கனமழை பெய்ததால் அங்கு சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றுள்ளார். மழை நின்ற பிறகு, திடீரென லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வருவதற்குள் லாரியில் இருந்த நூல் பண்டல்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியும் தீயில் எரிந்து சேதமானது.

    வாகனத்தில் தீ பிடித்ததால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு ரூ. 12 லட்சம் கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறைப்படி விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் சர்வேயர் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

    இதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில், இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டது.

    பின்னர் மேல்முறை யீட்டில் இந்த தொகை செலுத்தப்படும் வரை 7.5 சதவீதம் வட்டியும் சேர்ர்த்து வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்திரவிட்டது.

    இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு தராமல் இழுத்தடிப்பு செய்ததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுத்து தொகையை வசூலித்து தர வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார்.

    சமரச பேச்சுவார்த்தை

    வழக்கு தாக்கல் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிரச்சனையை தீர்க்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சமரச பேச்சுவார்த்தைக்காக வக்கீல் பாலசுப்பிரமணியம் என்பவரை கடந்த வாரம் நியமனம் செய்தது. சமரச பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் பழனியப்பனுக்கு ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 132 வழங்க இன்சூரன்ஸ் கம்பெனி சம்மதம் தெரிவித்தது. இதையொட்டி, இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் பாதிக்கப்பட்ட பழனியப்பனிடம் வழங்கினார்.

    Next Story
    ×