ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு

அறுவடை துவங்கி காய வைப்பதற்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது.விவசாயிகள் மல்லியை இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி, உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளது
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு
Published on

குடிமங்கலம் :

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக களிமண் விளைநிலங்களில் கொத்தமல்லி மற்றும் கொண்டைக்கடலை பிரத்யேகமாக இப்பகுதியில் சாகுபடியாகிறது.அந்தியூர், கணபதிபாளையம், முக்கூடுஜல்லிபட்டி, பண்ணைக்கிணறு, வெனசப்பட்டி, ராகல்பாவி சுற்றுப்பகுதிகளில் அறுவடை துவங்கி காய வைப்பதற்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது.

இதே போல் குடிமங்கலம் வட்டாரத்தில் அறுவடை செய்யப்படும் கொத்தமல்லி, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.கொத்தமல்லி தழை தேவைக்காக இல்லாமல் தானியங்களுக்காக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 90-120 நாட்களில் அறுவடை துவங்குகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கொத்தமல்லி சாகுபடியில் அதிக மழை காரணமாக, செடியின் வளர்ச்சியிலும் பூ விடுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 15 மூட்டை விளைச்சல் இருக்கும்.நடப்பு சீசனில் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் காய வைத்து ஈரப்பதம் குறைந்த பிறகே கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியும். இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், மானாவாரி கொத்தமல்லி சாகுபடியில், அறுவடை துவங்கி உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது. விவசாயிகள் மல்லியை இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி, உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com